Friday, May 2, 2014

எதிர்பார்பு (ராணி 23-03-14)

சென்னையில் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் கதிரேசன் ஊரிலிருக்கும் அவனது அம்மா அப்பாவை அழைத்து வந்து தன்னுடன் வைத்துக்கொள்ள தீர்மானித்தான்.

அவன் தங்கியிருந்த வீட்டில் ஏசி, வாட்டர் கீட்டர், டீ.வி. பிரிட்ஜ், வாஷிங்மெஷின், கேஸ் அடுப்பு போன்ற சகல வசதிகளை செய்து வைத்துவிட்டு அவன் அம்மா அப்பாவை அழைத்து வந்தான்.

முதல் நாள் அவன் அம்மா கையால் சமைத்து சாப்பிட்டுவிட்டு ஆகா ஓகோவென்று பாராட்டினான். மறுநாள் வழக்கம்போல வேலைக்குச்சென்று இரவு பதினொன்று மணிக்கு வந்து மறுநாள் காலை ஐந்து மணிக்கு எழுந்து வேலைக்கு போய்விட்டான்.

ஒரு வாரம் ஓடிப்போனது.

" நாங்க ஊருக்குபோறோம்!" அவன் தந்தையும் தாயும் சொன்னபோது கதிரேசன் அதிர்ந்தான்.

" அப்பா, இங்க என்னப்பா குறையிருக்கு, சகல வசதிகளோட சந்தோஷமாத்தானே இருக்கீங்க அப்பறம் ஏன் ஊருக்கு போறோம்னு சொல்றீங்க?" சற்று மிதமான
கோபத்தில் கேட்டான் கதிரேசன்.

" நீ எங்களுக்கு எல்லா வசதிகளையும் செஞ்சு வெச்சது சரிதான், ஆனா நாங்க எதிர்பார்க்கிறது இந்த வசதிய இல்ல, வயசான காலத்துல நீ எங்ககூட தினமும் ஒருமணி நேரமாவாது சந்தோஷமா பேசி நேரத்த செலவளிக்கற அந்த தருணத்ததான், அது உன்கிட்டயிருந்து கிடைக்கல!" சுருக்கென்று வலித்தது அவரது வார்த்தைகள் கதிரேசனுக்கு.

" என்ன மன்னிச்சிடுங்கப்பா!" என்று அவர்கள் காலில் விழுந்தவன் வேறு வேலை

தேடுவது என்ற முடிவோடு எழுந்தான்.

No comments: