Tuesday, June 5, 2012

குழந்தை


மார்த்தாண்டத்திலிருந்து புறப்பட்ட தனியார் பேருந்தில் ஒலிப்பரப்பாகிக்கொண்டிருந்த பாடலையும் மீறி குழந்தையின் அழுகைச்சத்தம் கேட்டது.

 சக பயணிகளின் பார்வை தன் மீது திரும்பியதும் ஷாலினி செய்வதறியாது திகைத்தாள். குழந்தை எந்த சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் வீறிட்டு அழுதுகொண்டிருந்தது.

தனது செல்போனை எடுத்து டயல் செய்தாள் ஷாலினி.

 ``சகுந்தலா, உடனே ஒரு டாக்சி பிடிச்சி நாகர்கோவிலுக்கு வந்துடு, குழந்தை அழுதுகிட்டே இருக்கு’’

 ``சரிம்மா இதோ வந்திடுறேன்’’. ஷாலினியை பஸ் ஏற்றிவிட்டு நடந்து வீட்டுக்கு போய்க்கொண்டிருந்த சகுந்தலா எதிரே வந்த டாக்சியை நிறுத்தி ஏறிக்கொண்டாள்.

 பேருந்து நாகர்கோவிலில் வந்து நின்றது. டாக்சி வேகமாய் வந்து நிற்க சகுந்தலா அவசரமாய் இறங்கி ஷாலினியிடமிருந்து குழந்தையை வாங்கியதும் அதன் அழுகை அடங்கியது.

 ``பெத்த தாயைப்பார்த்ததும் அழுகையை நிறுத்திடிச்சே..!’’ என பக்கத்து சீட்டிலிருந்த பெண் சொல்லவும் ஷாலினிக்கு சுருக்கென்று வலித்தது. 

குழந்தையை வேலைக்காரி சகுந்தலாவிடம் தந்துவிட்டு பயணத்தை தொடரலாம் என நினைத்தவள் சட்டென்று பஸ்சை விட்டு இறங்கி டாக்சியில் ஏறிக்கொண்டாள். குழந்தையை வேலைக்காரியிடம் விட்டுவிட்டு சென்னையில் பார்க்கும் வேலையை ராஜினாமா செய்யவேண்டும் என்ற எண்ணம் மனதில் அழுத்தமாக நிலைத்திருந்தது.

குங்குமம்

No comments: