Friday, September 2, 2011

மனைவி


பிரபல பம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் பிட்டர் வேலை செய்யும் வெள்ளிங்கிரிக்கு திருமணம் ஆகி ஒரு வாரம்தான் ஆகியிருந்தது.

இரவு ஒன்பது மணிவரை நைட்ஷிப்ட் வேலையும் கட்டாயம் செய்யவேண்டுமென்று கம்பெனி நிர்வாகம் கேட்டுக்கொள்ளவே கடுப்புடன் வீடு திரும்பினான் வெள்ளிங்கிரி.

வீட்டுக்கு வந்ததும் வராததுமாக தனது மனைவி கவிதாவிடம் சொல்லி சங்கடப்பட்டான்.

``என்னங்க, தினமும் நீங்க நைட் ஷிப்ட் முடிஞ்சு வந்தாப் போதும்!’’ கவிதா சொன்னபோது மீண்டும் எரிச்சலானான்.

``புதுசா கல்யாணம் ஆன எந்த பொண்ணும் புருஷன் நேரத்தோட வீட்டுக்கு வந்து மனைவியோட இருக்குறததான் விரும்புவா, நீ வேணாங்கறியே ஏன்?’’ வெள்ளிங்கிரி புரியாமல் கேட்டான்.

`` எனக்கும் என் புருஷன் நேரத்தோட வந்து என்கூட இருக்கிறது புடிக்கும்தான், ஆனா வீட்டுல பிளஸ் டூ படிக்குற உங்க தங்கச்சி இருக்குறா, நீங்க வேல முடிஞ்சு நேரத்தோட் வீட்டுக்கு வந்தா என்ன கொஞ்சறதும் அணைக்கிறதுமா இருப்பீங்க, இதயெல்லாம் உங்க தங்கச்சி பார்த்துட்டாலோ கேட்டாலோ அவ படிப்புல கவனம் சிதறிடும் அதான் அப்பிடிச் சொன்னேன்!’’ கவிதா சொல்லச் சொல்ல அது அவனுக்கு பெருமிதமாக இருந்தது.

குமுதம் 07-08-2011

No comments: