Wednesday, April 29, 2009

பீடி

மடியிலிருந்த பீடிகட்டிலிருந்து ஒன்றை உருவி பற்றவைத்து, பீடிக்கட்டை தலைமாட்டில் வைத்துவிட்டு தூங்கிப்போனான் தாசையா. விடிந்ததும் புகை பிடிக்க பீடிக்கட்டை துளாவியபோது அது இல்லாமல் குழம்பிப்போனான்.

மறுநாள் ராத்திரி வழக்கம்போல் பீடி புகைத்துவிட்டு தூங்குவதுபோல் நடித்தான். ஒரு மணி நேரம் கழிந்ததும் அவனது மகன் ரமேஷ் பூனை நடை நடந்து வந்து பீடிக்கட்டை மெல்ல எடுத்தான்.

சட்டென்று அவனைப் பிடித்து கன்னத்தில் பளாரென்று அறைந்தான் தாசையா.

‘’ ஏண்டா இந்த வயசுல உனக்கு பீடி கேக்குதா உன்ன...’’ மீண்டும் அடிக்க கையை ஓங்கினான் தாசையா.

‘’ அடிக்காதீங்கப்பா, விடிஞ்சா பீடிகட்ட எடுத்துகிட்டு டாய்லெட் போவீங்க, உள்ளேயிருந்து பீடி குடிப்பீங்க, அப்பறமா நான் போகும்போது உள்ளே ஒரே பீடி நாத்தமா இருக்கும், அதான் உங்க பீடிகட்ட எடுத்து ஒளிச்சு வெச்சேன்!’’

மகன் சொன்னது சுளீரென்று வலிக்க பீடி புகைப்பதை நிரந்தரமாக நிறுத்துவது என அந்த நிமிடமே தீர்மானித்தான் தாசய்யா.

No comments: