Friday, January 23, 2009

கெட்டவன்

‘’சார் இந்த வாரம் பெண் விடுதலை பற்றி ஒரு கட்டுரை எழுதி தர முடியுமா?’’ பத்திரிகை ஆசிரியர் மதன் பிரபல எழுத்தாளர் ராசா இளமதியனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டார்.

‘’ஆபீசுல நிறைய வேலைஇருக்கு இந்த வார இறுதியுல எழுதி அனுப்பினா பரவாயில்லையா?’’ எனக் கேட்டார் ராசா இளமதியன். சரியென்று தனது தொலைதொடர்பை துண்டித்தார் மதன்.

பெண்களை அடக்கி ஆளும் ஆண்வர்க்கத்தைபற்றியும் பெண்களுக்கு சம உரிமை வேண்டுமென்றும் பெண்களால் எந்த துறையிலும் சிறப்பாக வேலை பார்க்க முடியும் என்றும் அவர் எழுதிய கட்டுரை பத்திரிக்கையில் பிரசுரமாகி பலரது பாராட்டுக்களையும் பெற்றது.

பத்திரிகை ஆசிரியர் மதன் மீண்டும் தொலைபேசியில் அழைத்தார்.

‘’சாதித்த மங்கைகள் தலைப்புல ஒரு கட்டுரை எழுதணும் உங்களுக்கு ஆபீஸ் வேலை அதிகமா இருக்கும் இந்த கட்டுரை கொஞம் சீக்கிரம் வேணும் கிடைக்குமா?’’

‘’ கவலையே படாதீங்க உடனே எழுதியிடுறேன், ரெண்டு நாளைக்கு முன்னால தான் ஆபீஸ் வேலைய ராஜினாமா செஞ்சுட்டேன்’’ என்றார் எழுத்தாளர்.

‘’ ஏன் ’’ என்று கேட்டார் மதன்.

‘’புதுசா மார்கெட்டிங் மேனேஜர் ன்னு ஒரு பொண்ண நியமனம் பண்ணியிருக்காங்க அந்த பொண்ணு கீழ எல்லாம் என்னால வேலை பார்க்க முடியாதுன்னு ராஜினாமா செஞ்சுட்டேன்’’ என்ற போது மதன் ஆசிரியருக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.

குங்குமம் வார இதழில் வெளிவந்தது

No comments: