Friday, May 2, 2014

இவன் வேற மாதிரி (ஒரு பக்கக் கதை)



வீட்டோட மாப்பிள்ளையான விஸ்வநாதன் அன்று தனது மகன் இளமதியனை மடியில் வைத்து கதை சொல்லிக்கொண்டிருந்தார்.

"டாடி...வாழ்க்கையிங்கறது ஒரு சக்கரம்ன்னு ஸ்கூல்ல மிஸ் சொன்னாங்க...அப்படியின்னா என்ன..? " கேட்டான் இளமதியன்.

"உன்னோட அம்மா பிறந்தப்போ உன்னோட பாட்டி உன் அம்மாவ ஒரு குழந்தையா எப்பிடி பார்த்துகிட்டாங்களோ அது மாதிரி உன் பாட்டி இப்போ நோய் வந்து படுத்தப்போ உன் பாட்டிய ஒரு குழந்தையா நினச்சி உன் அம்மா கவனிக்கிறாங்க, இதுதான் வாழ்க்கைச் சக்கரம்ங்கறது...மாறிகிட்டேயிருக்கும், புரிஞ்சுதா..?"

" டாடி, நீங்க குழந்தையா இருக்குறப்போ உங்கம்மா அதாவது என் பாட்டி உங்கள குழந்தையா பார்த்துக்கலையா..?"

" ஓ...பார்த்துகிட்டாங்களே..!"

" பிறகு ஏன் பாட்டிய நீங்க குழந்தையா பார்த்துக்காம முதியோர் இல்லத்துல கொண்டு போய் விட்டிருக்கீங்க..?"

அவனது கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாமல் தடுமாறினாலும், அம்மாவ வீட்டுக்கு அழைச்சுட்டு வரணும் என்ற எண்ணம் எழ, இளமதியனை வாரி அணைத்து முத்தமிட்டான், தனது அகக்கண்ணை திறந்தமைக்காக...

பொதிகை மின்னல் டிசம்பர் இதழில் வெளிவந்தது.

No comments: