Sunday, June 12, 2011

பசி

கோடை விடுமுறையைக் கொண்டாட தனது மனைவி, குழந்தைகள், தாய், தந்தையரோடு காரில் புறப்பட்டார் கதிர்வேல்.

வழியில் ஒரு ஹோட்டலில் சாப்ப்பிட இறங்கினார்கள். அனைவருக்கும் அளவுச் சாப்பாடு பரிமாறப்பட்டது. குழந்தைகள் இருவரும் தட்டிலிருந்த சாதத்தை முழுவதும் சாப்பிடாமல் மீதம் வைத்தனர்.

கதிர்வேலின் தாயார் தெய்வானை சப்ளையரிடம் ஒரு இலை வாங்கி மீதமிருந்த சாதத்தை அதில் கொட்டி பார்சலாக்கி தரும்படி கேட்டாள்.

தனது தாயாரின் செயலைக்கண்டு எரிச்சலடைந்தார் கதிர்வேல். சாப்பிட்டு மீதமான சாதத்தை பார்சல் செய்து தர கேட்டால் பார்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று தனது தாயாரை வெறுப்பாய் பார்த்தார் கதிர்வேல்.

``இதுக்குத்தான் உங்கம்மாவ எங்கயும் கூட்டிகிட்டு போகவேண்டாமுன்னு சொல்றது, பொது இடத்துல எப்படி நடந்துக்கிறாங்க பார்த்தீங்களா?’’ கதிர்வேலின் மனைவி எரிச்சலாகச் சொன்னாள்.

ஹோட்டலை விட்டு வெளியே வந்தபோது பசியோடு காத்திருந்து பிச்சை கேட்ட ஒரு முதியவருக்கு அந்த பார்சலை தந்துவிட்டு கூடவே தயிரும் ஊறுகாயும் வாங்கி சாப்பிடும்படி காசு தந்தாள் தெய்வானை.

``ஹோட்டல்ல சாதம் மீதம் வெச்சா அத அவங்க குப்பைத்தொட்டியுலதான் போடுவாங்க, அத பசியோட இருக்கிற யாருக்காவது கொடுத்தா அவங்க ஒரு நேர பசி ஆறுமில்லையா?;’’ சாந்தமாய் சொன்ன தனது தாயாரை பெருமையாகப் பார்த்தார்கள் அவரது தந்தையும் மனைவியும் குழந்தைகளும்.

குமுதம் 15-06-2011

No comments: