Sunday, March 27, 2011

புண்ணியம்

பஞ்சாயத்து தலைவர் மனோ தங்கராஜ் வீட்டுக்கு வந்து `ஐயா’ என்று குரல் எழுப்பி அடக்கமாக நின்றார் ராமசாமி.

” என்ன வேணும்!’’ என்றபடியே வெளியே வந்தார் மனோதங்கராஜ்..

“ லோண் வேணும் சார்!” மறுபடியும் பணிவாய் கேட்டார் ராமசாமி.

“ என்ன லோண் வேணும், வீடு கட்ட லோணா, இல்ல மாடு வாங்க லோணா!”

“ அதெல்லாம் வேணாங்க, என் வீடு குடிசையுங்க, வீட்டுக்கு பின்புறம் ஒரு கழிவறை கட்டணும், அதுக்கு லோண் குடுங்க சார்!”

“ அதுக்கெல்லாம் லோண் கிடைக்காது!” என்றார் மனோ தங்கராஜ்.

“ என்ன சார் இது, ஒருத்தருக்கு வீடு கூட இல்லாம இருக்கலாம், ஆனா கழிவறை இல்லாம இருக்க முடியுமா? முதல்ல கழிவறை கட்ட லோண் குடுத்துட்டு அப்பறமா வீடு கட்ட லோண் குடுங்க!” விரக்தியாய் சொன்ன அவரது வார்த்தைகள் மனோ தங்கராஜின் மனதை ஒரு பிடி பிடித்தது.

“ கொஞ்சம் இருங்க!” என்று சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்று ஐயாயிரம் பணம் எடுத்து வந்து அவரிடம் தந்தார்.

“ இத நீங்க திரும்ப கட்ட வேண்டாம், போய் கழிவறை கட்டிக்குங்க!” அவரது வார்த்தைகளையும் பணத்தையும் கண்டு அசந்துபோய்,

“ நீங்க மகராசனா இருக்கணும்!” என்று மனதார வாழ்த்திவிட்டு வெளியேறினார் ராமசாமி.

“ என்னங்க, கோவில் கட்ட நன்கொடை தர்றதுக்கு வெச்சிருந்த பணத்த யாரோ வந்து கேட்டதும் உடனே தூக்கி குடுத்துட்டீங்களே, உங்களுக்கென்ன புத்தி கித்தி கெட்டு போச்சா?” வார்த்தைகளை கோபமாய் உதிர்த்தபடி வெளியே வந்தாள் அவரது மனைவி.

” கோவில் கட்ட உதவி பண்ணுனா என்ன புண்ணியம் கிடைக்குமோ அதைவிட பலமடங்கு புண்ணியம் ஒரு ஏழைக்கு கழிவறை கட்ட உதவினா கிடைக்கும்!”

அவரது வார்த்தைகள் அர்த்தமுள்ளவை என்பதை உணர்ந்து பதிலின்றி அடங்கிப் போனாள் அவரது மனைவி.

No comments: