Monday, November 15, 2010

செலவு

தனது மகன் இளமதியனை எல்.கே.ஜியில் சேர்த்ததிலிருந்து இன்றுவரை அவன் படிப்புக்கு ஆன செலவுகளை ஒரு நோட்டுப்புத்தகதில் எழுதி வந்தான் கிருஷ்ணமூர்த்தி. அதைப்பார்க்கப்பார்க்க அவனது மனைவி பரிமளாவுக்கு கோபம் வந்தது.

`யாராவது சொந்த புள்ளைக்கு செலவு பண்றத எழுதி வைப்பாங்களா? உனக்காக இவ்வளவு செலவு பண்ணியிருக்கேன் அந்த பணத்தையெல்லாம் திரும்பக்குடுன்னு இந்த செலவுக்கணக்கக் காட்டி வாங்கப்போறீங்களா?’’ எரிச்சலாய்க் கேட்டாள் பரிமளா..

``எல்லா அப்பாக்களும் தன்னோட மகன் படிச்சாப்போதுமுன்னு மட்டும் தான் நினைக்கிறாங்க அவனோட படிப்புச்செலவு எவ்வளவு ஆச்சுன்னு யாரும் ஞாபகம் வெச்சு சொல்றதில்ல, நாளைக்கு நம்ம மகன் படிப்பு முடிஞ்சு வேல தேடுறப்போ தன்னோட படிப்புக்கு என்ன விலை கொடுத்தோம்ன்னு விபரத்தோட சொன்னா, எனக்காக அப்பா இவ்வளவு பணம் செலவு பண்ணியிருக்கிறாரேன்னு ஒரு பொறுப்பு வரும், படிப்பு முடிஞ்சு ஊர் சுத்தாம சீக்கிரமா ஒரு வேலய தேடி படிப்புக்காக அப்பா செலவு பண்ணின காச வேல செஞ்சு சம்பாரிச்சுடனுமுன்னு தோணும் அதனாலதான் இதெல்லாம் நான் எழுதறேன்!’’

கிருஷ்ணமூர்த்தி சொன்னபோது தனது கணவனின் பொறுப்பான செயலைக்கண்டு மனதிற்க்குள் பெருமிதம் கொண்டாள் பரிமளா.

No comments: