Thursday, June 11, 2009

தவறு

தனது மகனின் டைரியில் “பெற்றோரை அழைத்து வரவும்” என்ற வரிகளைப் படித்ததும் ராகுலுக்கு சைவ நாடிகளும் ஸ்தம்பித்தன.

“ ஏண்டா, ஸ்கூல்ல என்னடா தப்பு செஞ்ச?” எட்டாவது வகுப்பில் படிக்கும் தனது மகனை முறைத்தபடியே கேட்டான் ராகுல்.

“ நான் எதுவும் தப்பு செய்யல!” முதத்திலடித்தார்போல் பதிலளித்தான் அவனது மகன்.

ராகுல் அவனது மகன் படிக்கும் பள்ளிக்கூடம் சென்று வகுப்பாசிரியரைச் சந்தித்து விபரம் கேட்டார், தனது மகன் என்ன தப்பு செஞ்சானோ என்ற கவலையோடு.

“ சார் உங்க பையன் அவன் கூடப்படிக்கிற மாணவிகள்கிட்ட பேசுறப்போ கோபம் வந்தா ‘ மூதேவி, பேந்தை, கஸ்மாலம், சாவுகிராக்கியின்னு ரொம்ப மோசமா திட்டுறான், நீங்க தான் அவனுக்கு புத்திமதி சொல்லி திருத்தணும்!” அந்த வகுப்பாசிரியர் அமைதியாகச்சொன்னபோது ராகுலுக்கு அது சுருக்கென்றிருந்தது.

தனது மகன் முன்னிலையில் தனது மனைவியை திட்டும் வார்த்தைகளை கேட்டு அவன் வகுப்பில் படிக்கும் மாணவிகளை திட்டுகிறான், திருந்த வேண்டியது என் மகனல்ல, நான்’ என்றபடி தலைகுனிந்து வீட்டுக்கு திரும்பினான் ராகுல்.

No comments: