Thursday, April 16, 2009

அது

அந்த பழையகால பள்ளிக்கூடத்தை இடித்துவிட்டு புது கட்டடம் கட்டி, அதில் பயன்படுத்திய பழைய மேசை, பெஞ்ச்,டெஸ்க், நாற்காலி போன்றவற்றை ஏலம் விட்ட போது, அதிக ஏலம் கேட்டு வாங்கி வந்தான் ஆனந்த்.

ஆனந்தின் மனைவி சந்திரா அவனை கிண்டல் செய்தாள்.

`` அவன் படிச்ச பள்ளிக்கூடம் இருந்தப்போ, இது நான் படிச்ச பள்ளிக்கூடமுன்னு நாலு பேருகிட்ட பெருமையா சொல்வான், இப்போ கட்டடம் போன பிறகு அதுல பயன்படுத்தின மரச்சாமான்களைப் பார்த்தாலாவது ஒரு சந்தோஷம் கிடைக்குமுன்னுதான் ஏலம் எடுத்திருப்பான், இல்லையாடா?’’ ஆனந்தின் தந்தை அவனுக்கு ஆதரவாக சொன்னபோது ‘ ஆமாம் ‘ என்று தலையாட்டினான்.

அன்று மாலை வெளியே சென்றுவிட்டு வந்த ஆனந்திடம் ஆச்சரியப்பட்டுச் சொன்னாள் சந்திரா.

’’ படிக்கற பசங்க டெஸ்க் மேல காம்பஸ்ஸால சுரண்டி சுரண்டி I LOVE YOU DA ன்னு எழுதியிருக்காங்க பாருங்க!!’’ என்று அந்த டெஸ்கை காட்டினாள்.

அதில் எழுதியிருந்த DA என்ற வார்த்தைக்கு தர்ஷனா ஆனந்த் என்று அவன் முன்னாள் காதலி தர்ஷனா சுரண்டிவிட்டுப்போனது நினைவுக்கு வர, ஒரு நிமிடம் மெய்மறந்து அந்த டெஸ்க்கையே கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டு நின்றான் ஆனந்த்.