Wednesday, February 29, 2012

பெத்த மனசு

``பாட்டி...உங்களுக்கு எங்க போகணும்...?’’ தன் வண்டியின் குறுக்கே நடந்துபோன எண்பது வயது பாட்டியிடம் ஆதரவாய் கேட்டான் ராதாகிருஷ்ணன்.

``பக்கத்துல முதியோர் இல்லம் இருந்தா கொண்டு விடறியா...?’’

``சரியிங்க பாட்டி, உங்களுக்கு புள்ளையிங்க யாருமே இல்லையா?’’

``எனக்கு ஒரே மகன் தான். இருந்து என்ன பிரயோஜனம். நான் அவனுக்கு பாரமா இருக்கேன்னு இந்த இடத்துல என்ன விட்டுட்டு போயிட்டான். எனக்கு கண்ணு தெரியாது. நான் எந்த வண்டியிலாவது மோதி செத்து போகட்டுமுன்னு அவன் நினச்சிருக்கலாம்!’’ பாட்டியின் விழியோரம் கண்ணீர் நிறைந்திருந்தது.

``நீங்க வண்டியில ஏறுங்க பாட்டி, நான் கொண்டு போய் விடறேன்!’’ பாட்டியின் கரங்களைப்பிடித்து தனது காரின் இருக்கையில் அமர வைத்தான்.

அரைக்கிலோமீட்டர் பயணத்தில் ஒரு மாருதி காரும் லாரியும் மோதி ஆக்சிடென்ட் ஆகி டிராபிக்ஜாம் ஆகியிருக்கும் விபரத்தை பாட்டியிடம் கூறினான் ராதாகிருஷ்ணன்.

``கடவுளே...என்ன விட்டுட்டுபோன என் மகனும் மாருதி காருலதான் போனான். அவனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது!’’ கைகூப்பி பிரார்த்தனை செய்த பாட்டியை ஆச்சரியமாகப் பார்த்தான் ராதாகிருஷ்ணன்.

குமுதம் 29-02-12 இதழில் வெளிவந்தது.

No comments: