Monday, March 23, 2009

சிகரெட்

சீனிவாசனும் அவனது நண்பர் வேணுகோபாலும் முடிவெட்டிக்கொள்ள சலூண் கடைக்கு வந்தார்கள் அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நான்கு பேர் வரிசையில் முடிவெட்டிக்கொள்ள காத்திருந்தார்கள் இருவரும் சலித்தபடியே வெளியில் வந்து வேடிக்கை பார்த்தார்கள்.

" சீனு பக்கத்து கடையுல ஒரு சிகரெட் பத்த வெச்சுட்டு வந்துடலாம் வா" வேணுகோபால் அழைத்தபோது வேண்டாம் என மறுத்த சீனிவாசனை ஆச்சரியமாகப் பார்த்தான் வேணுகோபால்.

ஐந்து நிமிடத்துக்கொருதரம் சிகரெட் பிடிக்கும் சீனிவாசன் இப்பொழுது மட்டும் வேண்டாமென்று சொன்னதை அவனால் நம்ப முடியாமல் அதுக்கு என்ன காரணமென்று நேரடியாகவே கேட்டான்.

" முடிவெட்டுறவங்க நம்ம முகத்துக்கு பக்கத்துல நின்னு முடி வெட்டுறப்போ நாம சிகரெட் புடிச்சுட்டு போய் உட்கார்ந்தா நம்ம வாயிலிருந்து வர்ற சிகரெட் வாசம் அவருக்கு பிடிக்காம போய் முகம் சுளிக்கலாம் அதனாலதான் இப்போ வேண்டாமுன்னு சொன்னேன்"

அவனது பதிலில் வெளிப்பட்ட நல்லெண்ணத்தை நினைத்து அவனை பெருமையாகப் பார்த்தான் வேணுகோபால்.

No comments: